வேலூரில் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி மகளிர் காவல் நிலையம் முன்பு கை குழந்தையுடன் இளம்பெண் தர்ணா-புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு

வேலூர் : வேலூர் மகளிர் காவல்நிலையம் முன்பு நேற்று மதியம் இளம்பெண், கை குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து இளம்பெண் கூறியதாவது: வேலூர் சலவன்பேட்டையைச் சேர்ந்தவள் நான், எனது பெயர் சங்கீதா(30). எனது கணவர் சத்யா என்கிற சத்தியமூர்த்தி. அடகுகடை நடத்தி வருகிறார்.

கடந்த 2014ம் ஆண்டு இருவருக்கும் திருமணமானது. ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இதற்கிடையில் கடந்த ஆண்டு எனது கணவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கணவரிடம் கேட்டேன். இதனால் ஆபாச வார்த்தைகளில் பேசி, அடித்து துன்புறுத்தினார். இதற்கிடையே,  எனது கணவர் மற்றொரு பெண்ணுடன் பெங்களூருக்கு சென்று செட்டில்ஆகிவிட்டார். இதுதொடர்பாக கடந்த மாதம் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். அங்கிருந்து வேலூர் மகளிர் காவல்நிலையத்திற்கு வழக்கை விசாரிக்க அனுப்பினர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. அடித்து துன்புறுத்தினாலும் என் கணவர் எனக்கு வேண்டும். 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது என்று தெரியவில்லை.

எனேவ போலீசார் என் கணவரோடு சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார், அவரது கணவரை வரவழைத்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து இளம்பெண் தர்ணாவை கைவிட்டு சென்றார்.

Related Stories: