கோலார்: கோலார் டவுன் பகுதியை சேர்ந்த பெண். கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் 6 வயது சிறுமி. இவர் சம்பவத்தன்று காலை தாய் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தனிமையில் இருந்தார். இதை அறிந்த கிராம பஞ்சாயத்து உறுப்பினர் குமார் என்பவரின் தந்தை திம்மப்பா (60) சிறுமி வீட்டுக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். இதனால் சிறுமி சத்தமாக கூச்சலிட்டார். இதனால் திம்மப்பா அங்கிருந்து தப்பி சென்றார்.
வேலைக்கு சென்றிருந்த தாய் வீட்டுக்கு வந்த போது நடந்த சம்பவத்தை சிறுமி தெரிவித்தார். இதில் ஆத்திரமடைந்த அவர் ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். இதுகுறித்து தகவலறிந்த கிராம பஞ்சாயத்து உறுப்பினர் குமார் புகார் கொடுக்க வேண்டாம் என்று மிரட்டல் விடுத்தார். இருப்பினும் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் திம்மப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.