பிரதமர் திட்டத்தில் கடன் தருவதாக நாடு முழுவதும் போலி லோன் செயலி மூலம் 2.8 லட்சம் பேரிடம் மோசடி

* எம்எல்ஏ வேட்பாளர் உட்பட 4 பேர் சிக்கினர்

* 4 ஆண்டுகளாக மோசடி செய்தது அம்பலம்

மும்பை: மொபைல் லோன் ஆப்ஸ்கள் மூலம் மோசடிகள் நடந்து வருவது நாடு முழுவதும் பல இடங்களில் அரங்கேறி வருகிறது. இந்த போலி ஆப்கள் மூலம் கடன் கோரி விண்ணப்பிப்பவர்களிடம், செயல்பாட்டு கட்டணம் என்ற பெயரில் பணத்தை வாங்கிவிட்டு, கடன் தராமல் ஏமாற்றி விடுகின்றனர். இதுபோல், எம்எல்ஏ வேட்பாளர், ஐடி இன்ஜினியர் உட்பட 4 பேர் கும்பல், நாடு முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக சஞ்சீவ் குமார் சிங் (36), ஐடி இன்ஜினியர்கள் ராம்நிவாஸ் குமாவத் (25), விவேக் ஷர்மா (42) ஆகியோரை கைது செய்தனர். இவர்களில் சஞ்சீவ் குமார் சிங், இந்த மோசடி கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டுள்ளார். சமூக வலைதளத்தில் விளம்பரப்படுத்தியிருந்த லோன் ஆப்ஸ் லிங்க் குறித்து போலீசார்விசாரணை நடத்தியபோது, அது மோசடியான போலி லிங்க் என தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து தானாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதற்கிடையே, சால்வே என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மும்பை சைபர் கிரைம் போலீசார் கடந்த 2ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக, தொழில்நுட்ப குழுவினரை வைத்து ஆய்வு நடத்தியபோது, உத்தரபிரதேச மாநிலம் அலிகார், ஜெய்பூர் ஆகிய இடங்களில் கால் சென்டர் வைத்திருப்பது தெரிய வந்தது. உடனே உத்தர பிரதேசத்துக்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் உதவியுடன் ரெய்டு நடத்தினர்.உத்தரபிரதேசத்தில் கால்சென்டர் நடத்தி வந்த சஞ்சீவ் குமார் சிங்கை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த ஐடி இன்ஜினியர்கள் ராம்நிவாஸ் குமாவத், விவேக் சர்மா மற்றும் பிராஞ்சூல் ரத்தோட் ஆகியோரையும் கைது செய்தனர்.

விசாரணையில் இந்த கும்பல் சுமார் 9 போலி லோன் ஆப்ஸ்களை உருவாக்கியிருப்பது தெரிய வந்தது. அவை பிரதமர் பெயருடன் கூடியதாக உளள்ன. உதாரணமாக www.pradhanmantriloanyojana.com,www.pradhanmantri yojanaloan.com, www.sarvottamfinance.com என்ற வெப்சைட்களை உருவாக்கியுள்ளனர். இதுபோல், பிஎம்ஒய்எல், பிஎம் பாரத் லோன் யோஜனா, பிரதான் மந்திரி யோஜனா லோன், பிரதான் மந்திரி முத்ரா லோன், பாரத் யோஜனா லோன், முத்ரா லோன், கிருஷ்ணா லோன் என்ற பெயர்களில் ஆப்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த 2018ம் ஆண்டில் இருந்தே இந்த மோசடி நடந்துள்ளது. மேற்கண்ட லோன் விவரங்கள் தொடர்பாக சமூக வலைதளங்கள் மட்டுமின்றி, சில ஊடகங்களிலும் விளம்பரம் செய்துள்–்ளனர். இதை நம்பி விண்ணப்பிப்பவர்களிடம், பரிவர்த்தனைக் கட்டணமாக சுமார் 8,000 முதல் 25,000 வரை வாங்கியுள்ளனர்.

இந்த பணத்தை பெறுவதற்காக 25 இ வாலட்கள் மற்றும் 25 வங்கிக் கணக்குகள் வைத்துள்ளனர். லோன் ஆப்ஸ் மூலம் விண்ணப்பித்தவரிடம் பரிவர்த்தனை கட்டணத்தை பெற்ற பிறகு, அவருடனான அழைப்புகளை துண்டித்து விடுகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும், ஆண்டுக்கு சுமார் 4 கோடி ரூபாய் மோசடி நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த ஆப்சை சுமார் 2.8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கடன் பெற விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்யும் ஆவணங்களுடன் பரிவர்த்தனை கட்டணத்தையும் செலுத்துவது போல் இந்த ஆப்ஸ், வெப்சைட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என போலீசார் தெரிவித்தனர்.

வலைதளத்தில் மோசடி வலை...

* மோசடி ஆசாமிகள் உருவாக்கிய போலி வெப்சைட்கள்: pradhanmantriloanyojana.com, www.pradhanmantriyojanaloan.com, www.sarvottamfinance.com

* போலி ஆப்ஸ் பெயர்கள் பிஎம்ஒய்எல், பிஎம் பாரத் லோன் யோஜனா, பிரதான் மந்திரி யோஜனா லோன், பிரதான் மந்திரி முத்ரா லோன், பாரத் யோஜனா லோன், முத்ரா லோன், கிருஷ்ணா லோன்

* ஒவ்வொரு லோன் விண்ணப்பத்துக்கும் கடன் தொகைக்கு ஏற்ப பரிவர்த்தனைக் கட்டணமாக, ₹8,000 முதல் ₹25,000 வரை வசூல்.

* உபி உள்ளிட்ட இடங்களில் கால்ெசன்டர்களில் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் பெண்களை வேலைக்கு எடுத்துள்ளனர்.

Related Stories: