மின்கம்பத்தில் மோதியது விமான விபத்தில் உயிர் தப்பிய 64 பயணிகள்: ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: ஆந்திராவில் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது மின்கம்பத்தில் விமானம் மோதியது. இந்த விபத்தில் 64 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கண்ணவரம் விமான நிலையத்திற்கு அரபு நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் 64 பயணிகளுடன் நேற்று வந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கி கொண்டிருந்தபோது திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையை விட்டு சற்று விலகிச் சென்று, உயர் கோபுர மின்விளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது, சாமர்த்தியமாக செயல்பட்ட பைலட், விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால், விமானத்தில் இருந்த 64 பயணிகளும் எந்தவித பாதிப்புமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மின் கம்பத்தில் மோதியதால், விமானத்தின் வலது பக்க இறக்கை சேதமடைந்தது. அதேபோல், உயர் கோபுர மின்விளக்கு கம்பம் அடியோடு சாய்ந்தது. இந்த விபத்து காரணமாக விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: