24 நாடுகளை சேர்ந்த தூதர் குழு ஜம்மு காஷ்மீரில் ஆய்வு

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனால், காஷ்மீரில் நடந்த மனித உரிமை மீறல், அரசியல் தலைவர்களின் வீட்டு காவல், இணையதள முடக்கம் ஆகியவற்றுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அதன் பிறகு, கடந்தாண்டு ஜனவரியில், முதல் முறையாக 15 வெளிநாட்டு தூதர்கள் காஷ்மீர் வந்து ஆய்வு செய்தனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியாவை சேர்ந்த வெளிநாட்டு தூதர்கள் குழு 2 நாள் பயணமாக ஸ்ரீநகருக்கு வந்துள்ளது. அவர்களிடம் பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து உயர் அதிகாரிகள் விளக்கினர். இக்குழுவில், ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், மலேசியா, பிரேசில், இத்தாலி, பின்லாந்து, வங்கதேசம், கியூபா, சில்லி, போர்ச்சுகல், நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், சுவீடன், செனகல், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், அயர்லாந்து, கானா, எஸ்டோனியா, பொலிவியா, மலாவி, எரிட்ரியா, ஐவரி கோஸ்ட் ஆகிய 24 நாடுகளின் தூதர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories: