பெங்களூரு: பெங்களூரு சந்திரா லே அவுட் துணை மண்டலத்தில் நடந்த முறைகேட்டிற்கு துணை போனதாக 10 மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி லோக் ஆயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பெங்களூரு சந்திரா லே அவுட் துணை மண்டலத்தில் 35 கோடி செலவில் 48 வளர்ச்சி திட்ட பணிகள் நடந்தது. ஆனால் அந்த பணிகள் சரிவர நடைபெறவில்லை என்றும், குத்தகைதாரர்கள் பல லட்சம் ரூபாய் சுருட்டிவிட்டு, அலட்சியமாக பணிகளை முடிந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் விசாரணை நடத்தப்பட்டு பி.டி.சி.சி அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான பல்வேறு ஆதாரங்களும் மாநகராட்சி ஊழியர்களுக்கு கிடைத்தது. ஆனால் குத்தகைதாரர்களிடம் பணம் வாங்கி கொண்டு, எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.