ஆந்திராவில் அதிகாலை பயங்கரம் சுற்றுலா வேன் - லாரி மோதல் குழந்தை உட்பட 14 பேர் பலி

திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளியை சேர்ந்த 18 பேர் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள ஹஜ்மீர் பகுதிக்கு சுற்றுலா செல்ல நேற்று முன்தினம் இரவு வேனில் புறப்பட்டனர். நேற்று அதிகாலை கர்னூல் மாவட்டத்தில் உள்ள பெல்லுர்த்தி அடுத்த மாதாபுரம் அருகே வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த லாரி மீது வேன் திடீரென பயங்கரமாக மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், வேன் முழுவதுமாக நொறுங்கியது.

இந்த விபத்தில் ஒரு வயது குழந்தை, 5 பெண்கள், 8 ஆண்கள் என மொத்தம் 14 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும், படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக பெல்லூர்த்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைகப்பட்டனர். அவர்களில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: