தற்போது அடிக்கல் நாட்டும் திட்டங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் வருமா? இது அலாவுதீனின் அற்புத விளக்கா?.. ப.சிதம்பரம் கேள்வி

சிவகங்கை: தற்போது அடிக்கல் நாட்டும் திட்டங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் வருமா? இது அலாவுதீனின் அற்புத விளக்கா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்; இந்திய பொருளாதாரம் 2 ஆண்டுகளாக சரிந்து, நடப்பாண்டில் 7.5% அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அதல பாதாளத்தில் பொருளாதாரம் உள்ளது கூட தெரியாமல் மத்திய அரசு உள்ளது. பழைய வருவாய் பாதியாகக் குறைந்துவிட்டது; நொண்டி, நொண்டி பொருளாதாரம் போகிறது.

மரபை மீறி எடப்பாடி அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதாக செய்தி வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும். மரபை மீறி பட்ஜெட் தாக்கல் செய்தால், சட்டமன்றத்தில் கடுமையாக எதிர்க்க வேண்டும். ஆட்சி முடியும் தருவாயில் இப்போது 1100 என்ற எண்ணில் அழைத்தால், குறை தீர்ப்பார்களாம். குறுகிய காலத்தில் அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் நேர வேடிக்கை மத்தாப்பூ. தற்போது அடிக்கல் நாட்டும் திட்டங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் வருமா? இது அலாவுதீனின் அற்புத விளக்கா?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்ததாக கூறியவர் முதல்வர். ஆளுங்கட்சிக்கு தோல்வி பயம் அதிகரித்துவிட்டது ஊடகங்களில் ஆளும் கட்சி அளிக்கும் விளம்பரங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருப்பதே அதற்கு சான்று. அதிமுக எப்படி உடையும் என தெரியவில்லை; இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி உறுதி எனவும் கூறினார்.

Related Stories: