பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்றது பஞ்சாமிர்தம். திருப்பதிக்கு லட்டு என்பதை போல், பழநி என்றாலே பக்தர்களின் நினைவிற்கு வருவது பஞ்சாமிர்தம். இந்த பஞ்சாமிர்தத்தை தபால்துறை மூலமாக வீட்டில் இருந்தபடியே பெறுவதற்கு வசதி செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதன்படி அருகில் தபால் நிலையத்திலோ அல்லது கோயில் இணையதளத்திலோ ரூ.250 கட்டணம் செலுத்தி பதிவு செய்தால் அரை கிலோ எடையுள்ள பஞ்சாமிர்தம் டப்பா, 2 சிறிய விபூதி பாக்கெட்டுகள், 1 ராஜ அலங்கார முருகன் படம் ஆகியவை தபால் மூலமாக வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்.