தொடர்ச்சியாக பறிபோகும் சசிகலா, இளவரசி, சுதாகரன் சொத்துக்கள்; திருவள்ளூரை அடுத்த தற்போது திருவாரூரில் பறிமுதல்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டன. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலை குடியிருப்புகளை அரசுடைமையாக்கி திருவாரூர் ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 62 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இன்று காலை பறிமுதல் செய்தது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள வேளகாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 41.22 ஏக்கர் மதிப்பிலான நிலங்கள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறியிருந்தார்.

1995ம் ஆண்டு இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டு நிலங்கள் அனைத்துமே அக்ரோபார்ம் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சொத்துகுவிப்பு காலத்தில் வாங்கப்பட்ட சொத்துக்கள் என்பதால் இந்த நிலம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் சசிகலா, இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அண்மையில் சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோர் விடுதலையாகி தமிழகம் திரும்பியிருக்கிறார்கள். இந்த சூழலில் தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின் படி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரது சொத்துக்களை தொடர்ந்து பறிமுதல் செய்து வருகிறது.

Related Stories: