சிறுவர் பூங்காவில் சமூக விரோதிகள் அட்டகாசம்: கண்டுகொள்ளாத தங்கவயல் நகரசபை

தங்கவயல்: தங்கவயல் சிறுவர் பூங்காவில் சமூக விரோதிகள் அட்டகாசம் காரணமாக, குடித்து விட்டு வீசி எறிந்த மதுபானங்களின் காலி பாக்கெட்டுகள் சிதறி கிடக்கின்றன. தங்கவயல் ராபர்ட்சன் பேட்டை நகர சபையின் எதிரே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிறுவர் பூங்கா உள்ளது. இதில் சிறுவர்கள் விளையாடவும், பெரியவர்கள் உடற்பயிற்சி செய்யவும் கருவிகள் உள்ளது. நடை பயிற்சி செய்வதற்கான பாதையும் பூங்காவில் உள்ளது. இரவு நேரங்களில் பூங்காவின் உள்ளே நுழையும் சமூக விரோதிகள் அங்கு மது பானங்கள் அருந்தி விட்டு காலி பாக்கெட்டுகளை அங்கேயே வீசி செல்கின்றனர்.

பூங்காவின் மூலைகளில் காலி பாக்கெட்டுகளுடன் பாலீதின் கவர்களும் சிதறி கிடக்கின்றன. குப்பைகளும் குவிந்து கிடக்கிறது. பூங்காவில் போதிய மின் விளக்குகள் இல்லாமல் இருளில் இருப்பதால் சமூக விரோதிகளுக்கு வசதியாக உள்ளது. நகரின் முக்கிய பகுதியில் உள்ள நேதாஜி பூங்காவை தினசரி துப்புரவு செய்து, போதிய மின் விளக்குகளை அமைத்து, பாதுகாவலரை நியமித்தால் மட்டுமே சமூக விரோதிகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்த முடியும். இதை நகரசபை கவனத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

Related Stories: