சித்தூர்: சித்தூர் காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், ரூ.50 முதல் ரூ.5 ஆயிரம் வரை டிக்கெட் பெற்றும் தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், இந்த கோயிலில் ஊழல் நடைபெறுவதாக திருப்பதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று மாலை 3.30 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏஎஸ்பி ஸ்ரீனிவாஸ் மற்றும் அதிகாரிகள் கோயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கும் டிக்கெட் கவுன்டர், லட்டு கவுன்டர், தங்கும் விடுதிகள் மற்றும் கோயில் அலுவலகங்களில் சோதனை செய்தனர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. பிரபலமான இந்த கோயிலில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தியது பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.