புதுடெல்லி: டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்ற குடியரசு தின நிறைவு விழா நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த சமயத்தில், இஸ்ரேல் தூதரகம் அருகில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குடியரசு தினத்தையொட்டி கடந்த 26ம் தேதி டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொடியேற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, குடியரசு தின விழா நிகழ்ச்சியை நிறைவு செய்யும் விதமாக, டெல்லி விஜய் சவுக் பகுதியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். ராணுவத்தை சேர்ந்த பல்வேறு இசைக்குழுக்கள் வாத்தியங்களை இசைத்தனர்.