பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட ஒப்பந்தப்படி தண்ணீர் திறக்க வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை:பரம்பிக்குளம் ஆழியார் பாசன விவசாயிகள், பாசன நீர் பங்கீட்டின்படி மாதத்திற்கு 7 நாட்கள் தண்ணீர் திறந்துவிடக்கோரி காங்கயத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். பி.ஏ.பி. பாசன திட்டத்தில் காங்கேயம், வெள்ளக்கோவில் கடைமடைப் பகுதிகளில் சுமார் 48 ஆயிரம் ஏக்கர் நிலம், விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பி.ஏ.பி. பாசன நீர் பங்கீட்டு சட்டப்படி 14 நாட்கள், அதாவது மடை விட்டு மடை 7 நாட்கள் தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆனால் பாசன தண்ணீர் மாதத்திற்கு 7 நாட்களுக்குப் பதிலாக 3 நாட்கள் தான் திறந்து விடுகிறார்கள்.

இவை கடைமடைப் பகுதிகளுக்கு 2 நாட்கள் தான் வருகிறது. இவற்றில் தண்ணீர் வரும்போது கால்வாய் பகுதிகளில் குழாய் மூலம் தண்ணீர் முறைகேடாக பயன்படுத்தப்படுவதால், திறந்துவிடப்படும் தண்ணீர் முழுமையாக கடைமடைப் பகுதிகளுக்கு சென்று சேர்வதில்லை. பி.ஏ.பி பாசன திட்டத்தின் உத்தரவாதத்தின் படி மாதத்திற்கு 7 நாட்கள் தண்ணீர் திறந்து விட்டால், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் முழுமையாக கிடைத்துவிடும். விவசாயம் செழிக்கும். தமிழக அரசு,  விவசாயிகளின் நலன் கருதி, கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வரும்போது முறைகேடாக பயன்படுத்தப்படுவதை தடுக்கப்பட வேண்டும்.

மேலும் பரம்பிக்குளம், ஆழியார் பாசன விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: