ஆபீஸ்ல மாஸ்க் போடலன்னா....அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை:தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு துறைகளை சேர்ந்த  ஊழியர்களை தவிர்த்து மற்ற துறை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. கடந்த மே 3ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 33% பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கியது. இதில், சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், 50% ஊழியர்களுடன் கடந்த மே 18ம்  தேதி முதல் 6 நாட்கள்  அரசு அலுவலகங்களில் சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. தொடர்ந்து, கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் 100 சதவீதம் முதல்  ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, சானிடைசர் வைப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால்,  பெரும்பாலான அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் முகக்கவசம் அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இதுதொடர்பாக பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் அனைத்து செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கோவிட்-19 தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் பொது இடங்கள்  மற்றும் பணி செய்யும் இடத்தில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, பணி செய்யும் இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க  வே்ணடும். பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் அவர்களை பணி செய்யும் இடத்திலோ மற்றும் அரசு அலுவலகங்களுக்குள்ளோ அனுமதிக்க கூடாது. பணி செய்யும் இடத்தில் முகக்கவசம் அணியாத அரசு  ஊழயர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: