புதுடெல்லி: ரோகிணி பகுதியைச் சேர்ந்த ஆஷிஷ்குமார் என்பவரின் மகள் தனிஷ்தா. இருபது மாத சிசுவான தனிஷ்தா, முதல் மாடி பால்கனியில் கடந்த 8ம் தேதி விளையாடிய போது, எதிர்பாராத விதமாக தரை தளத்தில் தவறி விழுந்தாள். மயங்கிய நிலையில் சர் கங்கா ராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தனிஷ்தாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக 11ம் தேதி தெரிவித்த டாக்டர்கள், பிழைப்பதற்கு சாத்தியமில்லை என்பதையும் கனத்த இதயத்துடன் தெரிவித்தனர். நெஞ்சை பிழியும் சோகம் என்றாலும், மனதை திடப்படுத்திக் கொண்ட ஆஷிஷ்குமாரும், அவரது மனைவியும், தனிஷ்தாவின் உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். நாட்டில் மிக இளம் வயதில் தானம் அளித்தவர் எனும் பெருமை தனிஷ்தாவுக்கு பொருந்திய நிலையில், அவரது இதயம், கல்லீரல், 2 சிறுநீரகம், 2 கருவிழி படலங்கள் ஆகியவை அதே மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது.