பெங்களூரு: எங்களுக்கும் மேலவை தலைவர் பதவி வழங்க வேண்டும். நாங்கள் யாரும் சன்னியாசிகள் கிடையாது என்று மேலவை உறுப்பினர் பசவராஜ்ஹொரட்டி தெரிவித்தார். பெங்களூரு விதானசவுதா எதிரே இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ``நான் மேலவை தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்று முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா, முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி ஆகியோரின் விருப்பமாகவுள்ளது. இதனால் மேலவை தலைவர் பதவி மஜதவுக்கு கிடைக்கவுள்ளது. ஏற்கனவே எச்.டி.தேவகவுடா என்னை மேலவை தலைவராக்க முடிவு செய்துள்ளார். இது குறித்து என்னுடன் கலந்து ஆலோசனை நடத்திய பின் முடிவு செய்யப்படும். மேலவை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள பா.ஜ.வுக்கு எங்களின் ஆதரவு உள்ளது.
இதற்கான கையெழுத்து போட்டு கடிதம் தயாராக வைத்து கொண்டுள்ளோம். கட்சி தலைவர் தெரிவித்த உடனே மேலவை செயலாளரிடம் வழங்கப்படும். பா.ஜ.வில் கூட மேலவை தலைவர் பதவிக்கு வேட்பாளர்கள் இருக்கலாம். ஆனால் நாங்கள் அரசியல் சன்னியாசிகள் கிடையாது. மேலவை தலைவர் பதவி குறித்து எச்.டி. தேவகவுடா, எச்.டி. குமாரசாமி ஆகியோர் முடிவு எடுப்பார்கள். மஜதவில் 13 உறுப்பினர்கள் உள்ளனர். ஜனத பரிவாரை ஒன்றிணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுபங்காரப்பாவிடம் ஆலோசனை நடத்தப்படும். இதே போல் ஜி.டி.தேவகவுடா, குப்பி சீனிவாஸ் உட்பட அதிருப்தியாளர்கள் அனைவரிடமும் ஆலோசனை நடத்தப்படும்.
மஜதவில் தொடர்பு பிரச்னைகள் உள்ளது. யார் எதை சொன்னாலும் அதை நம்பி விடுகின்றனர். பீகார் போல் ஜனத பரிவார் ஒன்றிணைக்கப்படும். ஜனத பரிவாரியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். சி.எம். இப்ராகீமை மஜத தலைவராக நியமிப்பது குறித்து தேவகவுடா முடிவு எடுப்பார். 2023-ம் ஆண்டு தேர்தலில் மஜதவை அதிகாரத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் வேலை செய்யப்படும். கர்நாடக உள்பட அனைத்து பகுதிகளில் மாநில கட்சிகளின் ஆதிக்கம் ஆரம்பித்துள்ளது. இதனால் அனைவரையும் ஒன்றினைத்து கட்சியை பலப்படுத்தப்படும் என்றார். பா.ஜ.வில் கூட மேலவை தலைவர் பதவிக்கு வேட்பாளர்கள் இருக்கலாம். ஆனால் நாங்கள் அரசியல் சன்னியாசிகள் கிடையாது.