புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 4 நாட்களில் 4.54 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ம் தேதி தொடங்கியது. முன்களப் பணியாளர்களுக்கு இது முதல் கட்டமாக போடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 669 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4 லட்சத்து 54 ஆயிரத்து 49 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டில். கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் 10,064 ஆக குறைந்துள்ளது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தடுப்பு மருந்து பெறுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனாவால் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களை போல் இரண்டு மடங்கு பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.