விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையால் மாவட்டத்தில் போடப்படும் சாலைகள் தரமற்ற வகையில் போடப்படுவதாக குற்றச்சாட்டு தொடர்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையால் மத்திய அரசின் நிதியில் எஸ்சிபிஏஆர் திட்டத்தில் (ஒப்படைக்கப்பட்ட ஒட்டுமொத்த வருவாய் திட்டம்) மாவட்டத்தில் பலகோடி ரூபாய் செலவில் ஊராட்சி கட்டிடங்கள், புதிதாக சாலைகள் ஒவ்வொரு ஆண்டு போடப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் கட்டப்படும் கட்டுமானங்கள், போடப்படும் சாலைகள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகளாவது தாக்குப்பிடிக்கும் வகையில் தரமாக போடப்பட வேண்டும். ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் போடப்படும் சாலைகள் ஏற்கனவே இருக்கும் மண் ரோடுகளை சமன் செய்யாமல் உரிய கனத்திற்கு ஜல்லி கற்கள், தார் சேர்க்காமல் மேலோட்டமாக போட்டு பணம் சுருட்டும் வேலை அசுரகதியில் நடந்து வருகிறது.