ஆவடி: ஆவடி அருகே பட்டாபிராம், அன்னம்பேடு, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பரத் (33). பிரபல ரவுடி. இதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் பார்த்திபன், சதாசிவம் ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் இரவு பொங்கல் விழாவை நடத்திட, அங்குள்ள காலி மைதானத்தில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பரத், என்னை அழைக்காமல் எப்படி பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யலாம் என கேட்டு, இருவரிடமும் தகராறு செய்துள்ளார். மேலும், அவர் விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை தடுத்துள்ளார். இதில் ஆத்திரமான பார்த்திபன், சதாசிவம் தலைமையில் நண்பர்கள் பரத்தை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பரத்துக்கு வலதுகை மணிக்கட்டு துண்டானது. மேலும் கால்முட்டி, வயிறு, தலை, முகத்திலும் பலத்த வெட்டுக்காயம் விழுந்தது.