பொங்கல் விழாவை தடுத்த ரவுடியை வெட்டி கொல்ல முயற்சி: கும்பலுக்கு வலை

ஆவடி: ஆவடி அருகே பட்டாபிராம், அன்னம்பேடு, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பரத் (33). பிரபல ரவுடி. இதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் பார்த்திபன், சதாசிவம் ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் இரவு பொங்கல் விழாவை நடத்திட, அங்குள்ள காலி மைதானத்தில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த  பரத், என்னை அழைக்காமல் எப்படி பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யலாம் என கேட்டு, இருவரிடமும் தகராறு செய்துள்ளார்.  மேலும், அவர் விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை தடுத்துள்ளார். இதில் ஆத்திரமான பார்த்திபன், சதாசிவம் தலைமையில் நண்பர்கள் பரத்தை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பரத்துக்கு வலதுகை மணிக்கட்டு துண்டானது. மேலும் கால்முட்டி, வயிறு, தலை, முகத்திலும் பலத்த வெட்டுக்காயம் விழுந்தது.

இதனால் சம்பவ இடத்திலேயே ரவுடி பரத், ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார். இதைத் தொடர்ந்து ரவுடிகள் பார்த்திபன், சதாசிவம் தலைமையிலான கும்பல் தலைமறைவானது. படுகாயம் அடைந்த பரத்தை உறவினர்கள் மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.  பின்னர் அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக  ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்புகாரின்பேரில் பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து,  ரவுடிகள் பார்த்திபன் சதாசிவம் உள்ளிட்ட கும்பலை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: