புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் வரும் 16ம் தேதி முதல் மக்களுக்கு வழங்கப்பட உள்ள நிலையில், ‘‘இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது,’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் 16வது மாநாடு நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியினை காணொலி வாயிலாக தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமானவர்களின் விகிதம் அதிகமாகவும், உயிரிழப்பு விகிதம் குறைவாகவும் உள்ளது. மற்ற நாடுகளுக்குத் தேவையான மருந்துகளை வழங்கும் திறனுள்ள உலகின் மருந்தகமாகவும் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்ட், உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் என 2 தடுப்பூசிகள் அவசர காலப் பயன்பாட்டுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டையும் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. மேலும், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா செயல்படுத்திக் கொண்டிருப்பதையும் உலகம் உற்று கவனித்துக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.