10ம் தேதி டோக்கனுக்கு 4ம் தேதியே எஸ்எம்எஸ் வருது... பொங்கல் பரிசையே கண்ணில் காட்டல.. ஆனா கொடுத்துட்டேனு சொல்றாங்க.. தஞ்சை பயனாளி அதிர்ச்சி

தஞ்சை: தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹2500 ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் இந்த பணி நடந்து வருகிறது. ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் பயனாளிகள் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கி வருகின்றனர். இந்நிலையில், தஞ்சையில் தி.மு.க. நிர்வாகி ஒருவர் பொங்கல் பரிசு வாங்காமலேயே அவரது செல்போனுக்கு வாங்கியபடி குறுந்தகவல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு: தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை முத்தமிழ்நகர் பகுதியை சேர்ந்தவர் இறைவன்.

திமுகவில் மாநில சட்ட திருத்தக்குழு உறுப்பினராக உள்ளார். அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள இவருக்கு, வரும் 10ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க ரேஷன் கடைக்கு வர வேண்டும் என்று டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பதிவு செய்துள்ள அவரது செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. இதனை படித்து பார்த்த இறைவன் கடும் அதிர்ச்சி அடைந்தார். அதில், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ₹2500 ரொக்கம் வாங்கி விட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து இறைவன், உறவினர்களுடன் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று நடந்த விவரங்களை கூறி உள்ளார்.

உங்களது செல்போனுக்கு தவறுதலாக குறுந்தகவல் வந்திருக்கலாம். வேறு ஒருவர் வாங்கி இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம். பின்னர் உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறோம் என்று ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து இறைவன் வழங்கல் அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: