தங்கவயல் சுரங்கத்தில் மீண்டும் ஏர் பிளாஸ்ட்: பொது மக்கள் பீதி

தங்கவயல்: தங்கவயல் தங்க சுரங்கத்தில் பல வருடங்களுக்கு பிறகு தொடர்ந்து காற்று வெடிப்பு (ஏர் பிளாஸ்ட்) ஏற்பட்டு நில நடுக்கம் போன்ற சத்தம் கேட்டதால் பொது மக்கள் பீதி அடைந்தனர்.  தங்கவயல் தங்க சுரங்கங்களில் தங்க உற்பத்தி பணி நடந்த போது ஆழ் சுரங்கங்களில் உள்ள பாறைகள் சூடேறி அதன் இடுக்குகளில் காற்று புகும் போது (ராக் பர்ஸ்ட்) பாறை வெடித்து நில நடுக்கம் போன்ற பெறும் சத்தம் கேட்கும், அதே போல் சுரங்கங்களில் ஊற்று நீர் நிரம்பி காற்றழுத்தம் ஏற்பட்டு (ஏர் பிளாஸ்ட்) பெரும் ஓசை கேட்கும். இது போன்ற வெடிப்புகள் தங்க சுரங்கத்தில் ஏற்பட்டு வெடித்த பாறை குவியல்களின் கீழ் சிக்கி பல தொழிலாளர்கள்  பலியாகினர். இந்த வெடிப்பு ஓசை தங்கவயல் மக்களுக்கு பழகிய ஒன்று. தங்க சுரங்கம் மூடப்பட்டு  உற்பத்தி பணி நின்று போன பிறகும் ராக் பர்ஸ்ட் மற்றும் ஏர் பிளாஸ்ட் ஓசைகள் கேட்டு கொண்டிருந்தது.

அதன் பிறகு பல வருடங்களாக ஏர் பிளாஸ்ட், ராக் பர்ஸ்ட் ஆகியவை ஏற்பட வில்லை. இந்த நிலையில் கடந்த 20ம் தேதி இரவு 8.40 மணியளவில் நிலநடுக்கம் போன்ற பெரும் சத்தம் கேட்டதால்  இதுவரை இந்த சத்தத்தை கேட்டிராத இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விவரம் அறிந்த பெரியவர்கள் ஏர் பிளாஸ்ட் குறித்து அவர்களுக்கு விளக்கி கூறினர். இந்த ஏர் பிளாஸ்ட் காரணமாக எந்த அசம்பாவிதமும் ஏற்பட வில்லை. அதை தொடர்ந்து மீண்டும் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12.50 மணிக்கு ஏர் பிளாஸ்ட் ஏற்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது ஏர் பிளாஸ்ட் ஏற்பட்டதால் பெரும்பான்மை மக்கள் அதை உணரவில்லை.

Related Stories: