புதுடெல்லி: இந்தாண்டு பிப்ரவரியுடன் காலாவதியான மோட்டார் வாகனங்களின் ஆர்சி, எப்சி மற்றும் ஓட்டுனர் உரிமங்களின் காலத்தை அடுத்தாண்டு மார்ச் 31 வரையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நீட்டித்துள்ளது. பஸ், லாரி, கார்கள் உள்ளிட்ட சாதாரண மற்றும் வர்த்தக பயன்பாட்டு வாகனங்களுக்கு ஆர்சி புத்தகம், எப்சி சான்றுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை இருந்தால்தான் வாகனங்களை இயக்க முடியும். இல்லை என்றால், அதிகாரிகளின் நடவடிக்கையில் சிக்கி வாகன பறிமுதல், அபராதம் போன்றவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஓராண்டாக இந்த ஆவணங்களை புதுப்பிக்க முடியாத காரணத்தால், நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன.