அணையில் மூழ்கி நடிகர் பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் அனில். மலையாள தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த இவர், ஏராளமான நாடகங்களில் நடித்துள்ளார். பின்னர், மலையாள  சினிமாவில் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் வெளிவந்த கம்மட்டிப்பாடம், ஐயப்பனும் கோஷியும், பொரிஞ்சு மரியம் ஜோஸ் ஆபாசம், கிஸ்மத் உள்பட ஏராளமான படங்களில்  நடித்துள்ளார். இந்நிலையில், ஜோஜு ஜார்ஜ் நாயகனாக நடிக்கும்  ‘பீஸ்’ என்ற படத்தில் இவரும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக இவர் இடுக்கி மாவட்டம், தொடுபுழாவுக்கு சென்றிருந்தார். நேற்று மாலை படப்பிடிப்பு முடிந்த பின்னர் அருகில் உள்ள மலங்கரா  அணையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார்.  அப்போது எதிர்பாராத விதமாக அவர் தண்ணீரில் மூழ்கினார்.  நண்பர்கள் அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அனில் பரிதாபமாக  உயிரிழந்தார்.

Related Stories: