துபாயில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தலுக்கு உதவியதாக விமான நிறுவன ஊழியர் கைது: 2.5 கிலோ தங்கத்துடன் 3 பேரும் சிக்கினர்

திருச்சி: துபாயில் இருந்து நேற்று முன்தினம் திருச்சி வந்த ஏர்இந்தியா விமானத்தில் தங்கம் கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், திருச்சி விமான நிலையம் வந்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிரடியாக சோதனை நடத்தினர். ஆனால் பயணிகளிடம் தங்கம் சிக்கவில்லை. ஏர்இந்தியா விமான நிறுவன ஊழியர் ஒருவர் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் கார் பார்க்கிங் மற்றும் கார்கோ, விஐபி வரும் வழி ஆகிய பகுதிகளில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது கார்கோ பகுதி வழியே வந்த ஏர்இந்தியா விமான நிறுவன ஊழியர் கோபிநாத்(50) என்பவர், வெளியே நின்றிருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரிடம் தங்கத்தை கொடுத்தபோது சுற்றிவளைத்த அதிகாரிகள் 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்த 2.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories: