கொலைகார ஆன்லைன் கந்து வட்டி செயலிகளை தடை செய்க : பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்!!

சென்னை : கொலைகார ஆன்லைன் கந்து வட்டிசெயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பழையனுார் சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயதான விவேக். இவர் மாமண்டூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் சரக்கு ஏற்றி இறக்கும் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். தனது தந்தையின் மருத்துவ செலவுக்காக GET RUPEE DOT COM என்ற ஆன்லைன் செயலியில் நான்காயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்தக் கடனுக்கு 300 ரூபாய் வட்டி சேர்த்து நான்காயிரத்து 300 ரூபாய் அவர் செலுத்த வேண்டும்; ஆனால் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதமாகியுள்ளது.

அதனால், கடன் கொடுத்த செயலியில் இருந்து, விவேக்கின் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில், விவேக் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றும். அவரைத் திருப்பிச் செலுத்த சொல்லும்படியும் தெரிவிக்கப்பட்டிருந்தது.கடனைத் திருப்பிச் செலுத்தாவிடில் விவேக் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டி வரும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதோடு நிற்காமல், இந்த நபர் உங்கள் செல்போன் எண்ணை வைத்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதைப் பார்த்த நண்பர்கள், விவேக்கை அழைத்து விசாரித்துள்ளனர். இதனால் அவமானமடைந்த விவேக், பழையனூர் சாலை கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ரூ.4,000 கடனை திரும்பச் செலுத்தாததற்காக ஆன்லைன் செயலி கந்துவட்டி நிறுவனம் அவமானப்படுத்தியதால்,  மனமுடைந்த மதுராந்தகத்தைச் சேர்ந்த விவேக் என்ற இளைஞர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். தந்தையின் மருத்துவச் செலவுக்காக வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலையில் விவேக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கந்து வட்டி நிறுவனம் திட்டியுள்ளது. அவர் திருடன் என்று நண்பர்களிடம் பொய்பரப்புரை செய்துள்ளது. அதுவே தற்கொலைக்கு காரணம்! ஆன்லைன் செயலி கந்துவட்டி நிறுவனங்களின் இந்தக் கொடுமையால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த செயலிகளை தடை செய்ய வேண்டும் என ஏற்கனவே நான் வலியுறுத்தியுள்ளேன். எனவே இனியும் தாமதிக்காமல் கந்துவட்டி செயலிகளை தடை செய்ய வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: