வீட்டிலேயே ரகசிய ஆய்வகம் அமைத்து போதை பொருள் தயாரித்த பி.ஹெச்டி பட்டதாரி கைது: ஐதராபாத்தில் அதிரடி நடவடிக்கை

ஐதராபாத்: ஐதராபாத்தில் வீட்டிலேயே ரகசிய ஆய்வகம் அமைத்து போதை பொருட்களை தயாரித்த பி.ஹெச்டி பட்டதாரியை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு வீட்டில் ரகசிய ஆய்வகம் அமைத்து போதை பொருள் (மெபெட்ரோன், 4 மெத்தில்மெத்காதினோன் அல்லது 4-மெதைல்ஃபெட்ரோன்) தயாரித்து விற்பனை செய்வதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு (டிஆர்ஐ) தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கிருந்த ரகசிய ஆய்வகத்தில் போதை பொருளை தயாரித்துக் கொண்டிருந்த பி.ஹெச்டி படித்த பட்டதாரியை கைது செய்தனர். இதுகுறித்து வருவாய் புலனாய்வு இயக்குனரக வட்டாரங்கள் கூறுகையில், ‘எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சம்பந்தப்பட்ட ஆய்வகத்தை சோதனை நடத்தினோம்.

அங்கு ரூ.63.12 லட்சம் மதிப்புள்ள 3.156 கிலோ மெபெட்ரோனை பறிமுதல் செய்தோம். போதை பொருள் தயாரித்த நபரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து ரூ .12.40 லட்சம் மற்றும் 112 கிராம் மெபெட்ரோன் மாதிரிகள் கைப்பற்றப்பட்டன. மேற்கூறிய போதை பொருள் தவிர, சுமார் 219.5 கிலோ எடையுள்ள மெபெட்ரோனை உற்பத்தி செய்வதற்காக வாங்கப்பட்ட மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போதை மருந்தை தயாரித்தவர் வேதியியல் பாடத்தில் பி.ஹெச்டி பட்டம் பெற்றவர். அவர், இதற்கு முன்பு மருந்தியல் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் 100 கிலோவிற்கு அளவிற்று மெபெட்ரோனை தயாரித்து விற்பனை செய்துள்ளார். இவருக்கு மூலப்பொருட்களை சப்ளை செய்த 2 பேர் கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பி.ஹெச்டி பட்டதாரி மீது தடை செய்யப்பட்ட போதைப்பொருள் தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: