விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டத்துக்கு மதிமுக ஆதரவு: வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டத்தையும் ரத்து செய்யக்கோரி கடந்த நவம்பர் 26 தேதியில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் அமைதி வழி அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று மத்திய பாஜ அரசு தெரிவித்துவரும் நிலையில், டிசம்பர் 14 முதல் ரயில் மறியல் போராட்டம், சாலை மறியல் போராட்டம் என அறப் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல விவசாயிகள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

விவசாயிகளின் டெல்லி முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நடத்துவதற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தீர்மானித்து உள்ளது. அதன்படி டிசம்பர் 14ம் தேதி தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கும், தமிழகமெங்கும் நடைபெறும் போராட்டங்களுக்கும் மதிமுக ஆதரவை வழங்குகிறது. அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வுரிமைக்காக டெல்லியில் விவசாயிகள் போராடுகிறார்கள் என்பதை மனதில் கொண்டு விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழகத்தில் அனைவரும் பேராதரவு வழங்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன். காத்திருப்பு போராட்டங்களில் மதிமுக விவசாய அணியினர் அனைவரும் பங்கேற்று கடமையாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: