நெல்லை: மலைகளை பாதுகாப்பது, மலைப் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது, மலையின் சுற்றுச்சூழலை பாதுகாப்பது போன்ற காரணங்களுக்காக 2002ம் ஆண்டு மலைகளின் கூட்டாளி என்ற அமைப்பு மேற்கொண்ட முயற்சியினால், ஐநா சபை 2002ம் ஆண்டை சர்வதேச மலைகள் ஆண்டு என்று அறிவித்தது. அதன்பிறகு 2003ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதியை யுனெஸ்கோ அமைப்பு சர்வதேச மலைகள் தினமாக அறிவித்தது. மக்களின் நலவாழ்வில் மலைகளின் முக்கியத்துவம், மலைகளை பாதுகாப்பது, மலைவாழ் மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் மலைகளால் உண்டாகும் வாழ்வாதார வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் இந்த சிறப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
உலக மக்கள் தொகையில் 13% பேர் தற்போதும் மலைகளில் வாழ்ந்து வருகிறார்கள். 40% பேர் உணவு தேவைக்கு மலைகளையே நம்பி உள்ளனர். உலக தண்ணீர் தேவையில் 75 சதவீதத்தை மலைகளே பூர்த்தி செய்கின்றன. மலைகளில் விளையும் அற்புத மூலிகைகள், மரங்கள் மற்றும் வன உயிரினங்களும் உணவுச்சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.