உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி புனிதா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று காலை பார்த்திபன், தனது மனைவியுடன், அதே பகுதியில் உள்ள தனது உறவினர் கிணற்றுக்கு சென்றார். அங்கு புனிதா துணிகளை துவைத்து கொண்டிருந்தபோது, பார்த்திபன் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதை கண்ட புனிதா அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் பார்த்திபன், நீரில் மூழ்கினார். தகவலறிந்து உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, தண்ணீரில் மூழ்கிய பார்த்திபனை சடலமாக மீட்டனர். இதையடுத்து பெருநகர் போலீசார், சடலத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.