சிறையில் இறைச்சி, மதுபானம் முன்னாள் அமைச்சர் ஜாலி: கைதியா அல்லது வி.ஐ.பியா என சந்தேகிக்கும் மக்கள்

பெங்களூரு: கர்நாடகத்தில் உள்ள சிறைகளில் கைதிகளுக்கு அவர்கள் கொடுக்கும் லஞ்சத்திற்கு ஏற்ப சலுகைகள் மற்றும் சொகுசு வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதாக சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி ரூபா குற்றம் சாட்டியிருந்தார். குறிப்பாக இவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் பணியாற்றியபோது, சிறையில் ஆய்வு நடத்தி ஆதாரங்கள் மூலம் சிறையில் முறைகேடு நடப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். அப்போது இவரிடம் சிக்கியது தமிழகத்தை சேர்ந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாதான். அதையடுத்து விவகாரம் குறித்து விசாரணை நடத்தி, மாநில உள்துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்த வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்நிலையில் பெலகாவி சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் வினய்குல்கர்னிக்கு, சொகுசு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருப்பதாக ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது.

தார்வார்டு கிராம பஞ்சாயத்து உறுப்பினர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்ட வினய்குல்கர்னிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பெலகாவி இன்டலகா சிறையில் அடைக்கப்பட்டார். குறிப்பாக சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் கைதிகளுக்கு வெளியில் இருந்து உணவு எடுத்து வந்து வழங்குவது தடை செய்யப்பட்டிருக்கும். ஆனால் வினய் குல்கர்னிக்கு அப்படியில்லை. வீட்டில் இருந்து அவரது மனைவியே உணவை சமைத்து எடுத்து வந்து வினய் குல்கர்னிக்கு வழங்கியுள்ளார்.

இதற்கான பணியில் சிறை ஊழியர்கள் சிலர் வெளிப்படையாக ஈடுபட்டுள்ளனர்.மேலும் வி.ஐ.பிக்களுக்கான மருத்துவ சிகிச்சை, கை, கால்களை பிடித்து விடுவதற்கு, தனி ஊழியர்கள், ஏ.சி, வசதி டி.வி மற்றும் வேண்டிய நேரத்திற்கு மதுபானம், இறைச்சிகள் அவருக்கு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.  இது குறித்து பல்வேறு புகார்கள் சிறைத்துறை எஸ்.பி கிருஷ்ணகுமாருக்கு வந்தது. ஆனால் அவர் இவை அனைத்து உண்மை இல்லை என்று அசால்ட்டாக பதில் கூறியுள்ளார். இதனால் சிறைத்துறை நிர்வாகத்தின் மீது யோகேஷ் கவுடா குடும்பத்தினர், ஆதரவாளர்கள்  அதிருப்தியில் உள்ளனர். 

Related Stories: