திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விழா 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் இன்று ஏற்றப்படுகிறது: பக்தர்களுக்கு அனுமதியில்லை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக இன்று மகா தீப பெருவிழா நடக்கிறது. அதையொட்டி, இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி முன்பு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக நேற்று காலை தீபக்கொப்பரையை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு தயார் நிலையில் வைத்துள்ளனர். மேலும், தீபம் ஏற்றுவதற்கான ஆயிரம் மீட்டர் திரி, 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது.

அவற்றை, இன்று காலை மலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கோயிலுக்குள் செல்லவும், மலைக்கு செல்லவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளியூர்களில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் வருவதை தடுக்க 15 சாலை சந்திப்புகளில் செக்போஸ்ட் போடப்பட்டுள்ளது.  வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும், நகர எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகிறது. வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் தலைமையில், 4 டிஐஜிகள், 8 எஸ்பிக்கள் உள்பட 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: