ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், ஸ்ரீநகரில் பரிம்போராவின் புறநகர்ப் பகுதியான குஷிபோராவில் பாதுகாப்பு படையை சேர்ந்த அதிவிரைவுப் படை வீரர்கள் நேற்று பிற்பகல் வேனில் சென்று கொண்டிருந்தனர். மக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் வேன் வந்தபோது, காரில் இருந்த 3 பேர் வேனை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில், படுகாயமடைந்த 2 வீரர்கள் அருகில் உள்ள ராணுவ மருத்துவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால், பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தவில்லை. வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டிருந்தால், பொதுமக்கள் தரப்பில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.