கரும்பு தோட்டத்தில் மூன்று சிறுத்தை குட்டிகள் மீட்பு

விஜயபுரா: விவசாயி ஒருவரின் கரும்பு தோட்டத்தில் மூன்று சிறுத்தை குட்டிகள் கண்டெடுக்கப்பட்டது. அதை வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். விஜயபுரா மாவட்டம், பபலேஷ்வர தாலுகா, ஜெய்னாபுரா கிராமத்தில் பிரசாந்த் தேசாய் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. நேற்று காலை தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச சென்ற தேசாய், ஏதோ சத்தம் வருவதை கேட்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அழகான மூன்று சிறுத்தை குட்டிகள் இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அலறி அடித்து கிராமத்திற்கு சென்று தெரிவித்தார்.

பின்னர், மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கரும்பு தோட்டத்திற்கு வந்து மூன்று சிறுத்தை குட்டிகளை மீட்டனர். கடந்த மே மாதம் இதே கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த வன அதிகாரிகள் வைத்த கூண்டில் ஆண் சிறுத்தை சிக்கியது. அதன் ஜோடி பெண் சிறுத்தை இந்த குட்டிகளை ஈன்றிருக்கும் என்றும், தாய் சிறுத்தை இதே பகுதியில் இருக்க வாய்ப்பு இருக்கும் என்பதால் அதை தேடி வருகிறார்கள்.

Related Stories: