ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள தொட்டிகளில் மண் நிரப்புவதற்காக புதிய மண் கொண்டு வரப்பட்டு, பதப்படுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் கோடை காலத்தின் போது ஊட்டியில் முதல் சீசன் அனுசரிக்கப்படுகிறது. இச்சமயத்தில் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. மலர் கண்காட்சியின் போது, தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதில் பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும். அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு பலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதிலும் மலர்கள் பூத்துக் குலுங்கும். இந்த தொட்டிகளைக் கொண்டு மாடங்கள் மற்றும் புல் தரைகளில் பல்வேறு அலங்காரம் மேற்கொள்ளப்படும். இம்முறை கொரோனா பாதிப்பு காரணமாக மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை. இதனால், வரும் 2021 மே மாதம் சிறப்பாக மலர் கண்காட்சி நடத்த தோட்டக்கலைத்துறை மும்முரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது.