சவுகார்பேட்டை பகுதியில் ஐபிஎல் போட்டி சூதாட்டம்: 4 வாலிபர்கள் சிக்கினர்

தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டை பகுதியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து ஆன்லைன் சூதாட்டம் நடைபெறுவதாக யானைக்கவுனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது, இதுசம்பந்தமாக சூளையை சேர்ந்த மயூர்(25). ஏழுகிணறை சேர்ந்த  பங்கஜ்(26). கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த சந்தீப்குமார்(27) மற்றும் தீரஜ்(35) ஆகிய 4 பேரை மடக்கி பிடித்தனர். அப்போது, அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து ஆன்லைன் சூதாட்டத்துக்காக  பிரத்யேகமாக ஒரு செயலியை வடிவமைத்துள்ளனர். மேலும், சூதாட்டத்தில் ஈடுபட  விருப்பமுள்ளவர்கள் இதற்கான லிங்க் மூலம் பங்கேற்கலாம் எனவும் அந்த  செயலியில் தெரிவித்துள்ளனர். ஒரு ஓவரில் எத்தனை விக்கெட்டுகள்  வீழ்த்துவார்கள் அல்லது எத்தனை ரன்கள் அடிப்பார்கள் என சூதாட்டத்தில்  ஈடுபட்டது தெரியவந்தது.  இதனையடுத்து, அவர்கள் மீது போலீசாரை பணி செய்யவிடாமல் சட்டவிரோதமாக தடுத்தல், ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தல், தமிழ்நாடு பரிசு திட்டங்கள் தடை சட்டம் 1979 உள்பட 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை  கைது செய்தனர். இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: