பழி வாங்கிய சிராக் பஸ்வான்

பீகார் தேர்தலில் பாஜ, ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு பிறகு நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், பீகாரில் இதுவரை தனிப்பெரும் கட்சியாக இருந்து, பிரதமர் மோடியையே சட்டை செய்யாமல் ‘தில்’லாக வலம் வந்த நிதிஷ் குமார், இம்முறை அவரது கூட்டணி வென்றாலும், முதல்வர் பதவிக்காக பாஜவின் மேலிட உத்தரவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், கூட்டணியில் இருந்து விலகிய லோக் ஜனசக்தி கட்சிதான். கூட்டணியில் கேட்ட தொகுதிகள் கிடைக்காததால், மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தனித்து போட்டியிட முடிவு செய்தார். தேர்தலில் அவருடைய கட்சி, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

என்றாலும், கேட்ட தொகுதிகளை கொடுக்காமல் கழற்றி விட்ட நிதிஷை சிராக் பழி வாங்கி விட்டார். ஐக்கிய ஜனதா தளத்திற்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகளை அவருடை கட்சி பிரித்து, பல தொகுதிகளின் தோல்விக்கு காரணமாகி விட்டது. சிராக் மட்டும் தனித்து போட்டியிடாமல் கூட்டணியில் இருந்திருந்தால் ஐக்கிய ஜனதா தளம்தான் தனிப்பெரும் கட்சியாக முதல் இடத்தை பெற்றிருக்கும் என அதன் மூத்த தலைவர்கள் கூறி உள்ளனர். மேலும், பாஜ திட்டமிட்டு சிராக்கை கழற்றி விட்டு, ஐக்கிய ஜனதா தளத்தின் வாக்குகளை பிரித்து, பாஜ தனிப்பெரும் கட்சியாகி விட்டதாகவும்  சிலர் கூறுகின்றனர்.

Related Stories: