நீர்நிலைகள், சாலையோரம் குவியும் குப்பைகள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நீர் நிலைகள், சாலையோரம் குப்பைகளை கொட்டும், ஊராட்சி,  பேரூராட்சி நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நாகர்கோவில்  மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் நாகர்கோவில் பீச்ரோடு ஜங்சன்  பகுதியில் உள்ள வலம்புரிவிளை உரக்கிடங்களில் கோட்டப்பட்டு வந்தது. மலைபோல்  குப்பைகள் தேங்கியதை தொடர்ந்து வலம்புரிவிளையில் இருந்து குப்பை கிடங்கை  வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் திடக்கழிவு  மேலாண்மை திட்டத்தின் கீழ் நாகர்கோவில் மாநகர பகுதியில் சேகரிக்கப்படும்  குப்பைகள் வலம்புரிவிளை உரக்கிடங்கிற்கு கொண்டுசெல்லாமல் சேகரிக்கப்படும்  பகுதியிலேயே உரமாக்கும் கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மாநகர  பகுதியில் 11 மையங்கள் அமைக்கப்பட்டு சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு  உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வீடுகள் தோறும் மாநகராட்சி தூய்மை  பணியாளர்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.  பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்து கொடுக்கவேண்டும்.  அங்கு தயாரிக்கப்படும் உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோல்  மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் திடகழிவு மேலாண்மை  திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகம்  இந்த திடகழிவு மேலாண்மை திட்டத்தை சரியாக பின்பற்றுவது இல்லை. ஊராட்சி,  பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த ஊராட்சி,  பேரூராட்சி எல்லைக்குகள் போட்டு குப்பைகளை பிரித்து உரமாக்கவேண்டும்.

ஆனால்  சில பேரூராட்சி, ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் நீர்நிலைகளின்  கரை பகுதி மற்றும் சாலையோரங்களில் கொட்டப்பட்டு வருகிறது. மலைபோல்  சேர்ந்தவுடன் தீவைத்து கொழுத்தும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

  நாகர்கோவில் அருகே உள்ள 18ம் படி பகுதியில் சாலையோரம் குப்பைகள்  கொட்டப்பட்டுள்ளது. குப்பைகள் கொட்டப்பட்டுள்ள பகுதியில் சுசீந்திரம்  பேரூராட்சி சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த  பகுதியில் குப்பைகள் அதிக அளவு சேர்ந்து வருகிறது. இதனால் குப்பைகள்  கொட்டப்பட்டு இருக்கும் பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இது குறித்து  அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: நாகர்கோவிலுக்கும்  சுசீந்திரத்திற்கு இடையே 18ம் படி பகுதி உள்ளது. இந்த பகுதி வழியாக  பறக்கைக்கும், சுசீந்திரத்திற்கு செல்லலாம்.

18ம் படி பகுதியில் அமைந்துள்ள  சாலையின் ஒரு பகுதியில் சுசீந்திரம் பெரிய குளமும் மற்றொரு பகுதியில்  வயல்வெளிகளும் உள்ளது. இந்த சாலையில் இரு இடங்களில் குப்பைகள் அதிக அளவு  கொட்டப்பட்டு வருகிறது. பேரூராட்சி சார்பில் அறிவிப்பு பலகையும்  வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் கொண்டு குப்பைகளை  கொட்டுவதில்லை. இரவு நேரத்தில் பேரூராட்சி அல்லது அந்த பகுதியை சுற்றியுள்ள  மற்ற ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இங்கு குப்பைகள்  கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகள் அதிக அளவு சேர்ந்தவுடன் குப்பையில்  தீவைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் கரும்புகையுடன் துர்நாற்றம்  வீசுகிறது. இந்த சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம்,  குப்பைகளை சாலையோரம், நீர்நிலைகளில் கொட்டும் பேரூராட்சி, ஊராட்சி  நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.

Related Stories: