லக்னோ : பசுக்கள் கொல்லப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் இந்த செயலில் ஈடுபடுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பசுவதை சட்டம் தவறாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டித்திருந்தது. இந்நிலையில் உ.பி.யில் நவம்பர் 3ம் தேதி பங்கர்மாவு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி இடைத்தேர்தலின் ஒரு பகுதியாக பிரச்சார பேரணியில் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், பசுக்கள் கொல்லப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த செயலில் ஈடுபடுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். பசுக்களை பாதுகாக்கவும், உணவளிக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் காப்பகங்கள் கட்டப்படவுள்ளன. இதற்காக மாநில அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.