சென்னை: சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் மயிலாப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாப்பூர் முத்துகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (27), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த ஏப்ரல் மாதம் வசந்த் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த வாரம் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு 10.15 மணியளவில் மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோயில் சாலையில் உள்ள ஓட்டலில் பிரைடு ரைஸ் வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 4 பேர், அவரை மடக்கி கை, கால் மற்றும் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில், படுகாயமடைந்த மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.