கோவில்பட்டி அருகே கார் மோதி 10 ஆடுகள் சாவு

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கார் மோதியதில் 10 ஆடுகள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தன. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தோணுகால் கிராமத்தைச் சேர்ந்த மருதன் மகன் கார்த்திக் (25). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு பாறைபட்டியில் இருந்து தோணுகால் கிராமத்திற்கு 50க்கும் மேற்பட்ட ஆடுகளை ஓட்டி வந்தார். இளையரசனேந்தல் ரோட்டில் வந்தபோது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார், எதிர்பாராதவிதமாக ஆடுகள் மீது மோதியது. இந்த விபத்தில் 10 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தன.

35க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்தன. தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். காயமடைந்த ஆடுகளை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: