ஆயுதங்களுடன் இரவு நேரத்தில் கொள்ளை சிசிடிவி கேமராவில் பதிவான மர்மநபருக்கு வலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இரவு நேரத்தில் ஆயுதங்களுடன் கொள்ளையன் உலாவரும் சிசிடிவி காட்சியை காவல்துறை வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் சின்னையன் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (45). ஓரிக்கையில் உள்ள டாஸ்மாக் குடோனில் கேஷியராக வேலை பார்க்கிறார். கடந்த வாரம் பிரகாஷ், குடும்பத்துடன்  திருவண்ணாமலையில் உள்ள உறவினர் திருமணத்துக்கு சென்றார். மறுநாள் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 25 சவரன் நகை, ரூ.10 ஆயிரம், வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

புகாரின்படி காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், சின்னையன் நகர், அலமேலு மங்கை தெருவில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், இரவு நேரத்தில், கொள்ளையன் தெருவில் நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. மேலும், தெரு நாய்கள் அவனை துரத்தும்போது, அதன்மீது கற்களை வீசி எறிந்து கொண்டே சென்றதும், கையில் இரும்பு ராடு வைத்திருந்தது பதிவாகியிருந்தது. தொடர்ந்து போலீசார், கேமராவில் பதிவான உருவத்தை வைத்து, மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: