ஈரோடு: சென்னிமலை அருகே பயணிகள் நிழற்குடையை குடிமகன்கள் டாஸ்மாக் பாராக மாற்றிவிட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னிமலை ஒன்றியம் எக்கட்டாம்பாளையம் கிராமம் சில்லாங்காட்டு வலசு பிரிவில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் மதுவை வாங்கும் குடிமகன்கள் அருகில் உள்ள பஸ் ஸ்டாப் நிழற்குடையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். காலை முதல் இரவு வரை இதே நிலை நீடிப்பால், பஸ்சுக்கு செல்லும் பயணிகள் வெயில், மழையில் நின்று கொண்டிருக்க வேண்டிய அவல நிலைக்கு ஏற்படுகிறது. மேலும் மது போதையில் அரை நிர்வாண கோலத்தில் அங்கேயே படுத்துக்கொள்வது, காலி பாட்டில்களை அங்கேயே உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பெண்கள், மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் வேலைக்கு சென்றுவிட்டு மாலை மற்றும் இரவில் வீடு திரும்பும் பெண்களுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.