தயாரிப்பாளர் உள்பட 2 பேர் மீது புகார் : நடிகர் சூரியிடம் ரூ. 2.70 கோடி மோசடி

சென்னை,:சென்னை விருகம்பாக்கம் தாராசந்த் அனெக்ஸ் பகுதியில் வசித்து வருபவர் சூரி (42). நகைச்சுவை நடிகர். வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு அடையாறு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர், சூரியை அணுகினார். அப்போது, நானும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும், ‘வீர தீர சூரன்’ என்ற திரைப்படம் தயாரிக்க உள்ளோம். அதில், நடிக்க சம்மதம் கேட்டுள்ளனர். அதற்கு சூரியும்  சம்மதித்தார். இதையடுத்து, படத்தில் நடிப்பதற்காக ரூ.40 லட்சம் சம்பளமாக பேசி முடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த படத்தில் சூரி நடித்து கொடுத்துள்ளார். ஆனால் அதற்கான பணத்தை வழங்காமல், ரமேஷும், அன்புவேல் ராஜனும் இழுத்தடித்துள்ளனர்.இந்நிலையில் சூரியிடம் சமாதானம் பேசி சிறுசேரியில் உள்ள இடத்தை தருவதாக அன்புவேல் ராஜ் உறுதியளித்தார். அதன்படி, அந்த இடத்தை பதிவு செய்ததற்கு பல தவணையாக ரூ.3.15 கோடி வரை சூரி கொடுத்துள்ளார். பின்னர் விசாரித்ததில் அந்த இடத்திற்கு சரியான பாதை இல்லை என்றும் அன்புவேல் ராஜனிடம் சரியான ஆவணம் இல்லை என்பதும் தெரிந்தது.

இதையடுத்து, சூரி, பணத்தை  திருப்பி கேட்டுள்ளார். அப்போது, 2018, ஜூன் மாதம் பணத்தை திருப்பி தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி சிறிய தொகையை திருப்பி கொடுத்துள்ளனர். மீதமுள்ள ரூ.2 கோடியே 69 லட்சத்து 92 ஆயிரத்து 500யை கொடுக்காமல் அன்புவேல் ராஜும், ரமேஷும் ஏமாற்றினர்.இதுகுறித்து அடையாறு போலீசில் சூரி புகார் செய்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் சூரி, நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்ற உத்தரவின்படி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: