மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிர்வாக இயக்குநர் பதவிக்கு ஆளும் கட்சி பிரமுகர் நியமனம்: பாஜவினர் உண்ணாவிரதம்

காஞ்சிபுரம்: மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநர் பதவிக்கு ஆளும் கட்சி பிரமுகர் நியமிக்கப்பட்டதைக் கண்டித்து பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் மதுராந்தக கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது.. காமராஜர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை, கடந்த 15 ஆண்டுகளுக்கு மூடப்பட்டு, பின் திமுக ஆட்சியில் மீண்டும் துவங்கப்பட்டது. இங்கு மதுராந்தகம், உத்திரமேரூர்,  திருப்போரூர், செய்யூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 3000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள நிர்வாக இயக்குநர் பதவிக்கு கடந்த 2019ம் ஆண்டு பாஜ மாநில விவசாய அணி தலைவர் முரளி மோகன் என்பவரை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் பதவிக்கு, நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, வேட்புமனு தாக்கல் செய்ய வந்த முரளிமோகன் வேட்புமனுவை, தேர்தல் அலுவலர் பெற மறுத்துவிட்டார். மேலும், ஏற்கனவே அந்த பதவிக்கு பொன்னுசாமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் மட்டுமே உள்ளதாகவும் கூறி அலுவலக வாயிலில் அறிக்கை ஒட்டப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து மாநில விவசாய அணி தலைவர் முரளிமோகன் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட விவசாய அணியினர் 10க்கும் மேற்பட்டோர் கூட்டுறவு ஒன்றிய வாயிலில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கூட்டுறவு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, உறுப்பினர் மற்றும் தேர்தல் விவரங்கள் முறையாக அறிவித்து விதிமுறைகளின்படி நடத்தப்படுகிறது  எனவே இதில் எவ்வித முறைகேடும் இல்லை என்றனர்.

Related Stories: