மணல் குவாரியை திறக்க கோரி அய்யனார் சிலையிடம் மனு கொடுத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் நூதன போராட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம், கம்மாபுரம், மங்கலம்பேட்டை ஆகிய பகுதிகளில் மாட்டுவண்டி மணல் குவாரி இயங்கி வந்தது. இதன் மூலம் 500க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வந்தனர். இந்நிலையில், கடந்த மூன்று வருடத்திற்கு முன் மாட்டு வண்டி மணல் குவாரிகள் மூடப்பட்டன. மணல் குவாரியை திறக்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.இந்நிலையில் கடந்த மாதம் கம்மாபுரம் அருகே உள்ள குமாரமங்கலம் மணிமுக்தாற்றில் பொதுப்பணித் துறையின் மூலம் அரசு மணல் குவாரி தொடங்கியது. இந்த மணல் குவாரி மூலம் லாரிகளில் மட்டுமே மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

இதனால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த சூழ்நிலையில் மாட்டுவண்டிக்கும் அனுமதி தர வேண்டுமென மாட்டுவண்டி தொழிலாளர்கள் மீண்டும் அனைத்து துறையினடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், மாட்டுவண்டி தொழிலாளர்கள் நேற்று புதுக்கூரைப்பேட்டை அய்யனார் கோயிலில் உள்ள அய்யனார் சிலைக்கு சிறப்பு வழிபாடு நடத்தி தங்கள் வாழ்வாதாரத்தை காத்து அரசு மணல் குவாரியில் மாட்டுவண்டிக்குமணல் அள்ள அனுமதி வழங்கி மணல் குவாரி அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அய்யனார் சிலையிடம் மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: