மனைவி பிரிந்து சென்ற தகராறு கிரிக்கெட் பேட்டால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை: உறவினர்கள் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி சஞ்சய் நகர் 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அப்புன் ராஜ் (42). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு பல வருடங்களுக்கு முன்பு தேவி என்பவருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக தேவி கணவரை பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து, அப்புன் ராஜ் அடுத்தடுத்து சரண்யா மற்றும் சந்தியா ஆகிய இருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் தலா ஒரு குழந்தைகள் உள்ளனர். பக்கத்து பக்கத்து வீட்டில் இருவரும் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இரண்டு மனைவிகளும் அப்புன் ராஜிடன் தகராறில் ஈடுபட்டு, அவர்களது தாய் வீட்டிற்கு சென்று விட்டனர் இதனால், அப்புன்ராஜ் நேற்று காலை முதலே அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு அக்கம் பக்கத்தினரிடம் சண்டை போட்டுள்ளார். இந்நிலையில், மாலை 5 மணி அளவில் தனது பெரியப்பா வேலுச்சாமி (82) மற்றும் அவரது மகன் ரவீஸ்வரன் (54) ஆகிய இருவரிடமும் சென்று, என் மனைவிகள் பிரிந்து சென்றதற்கு நீங்கள்தான் காரணம், எனக்கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், அருகில் இருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து வேலுச்சாமி மற்றும் ரவீஸ்வரர் ஆகிய இருவரையும் தாக்க முயன்றுள்ளார். சுதாரித்துக்கொண்ட ரவீஸ்வரர் அந்த கிரிக்கெட் பேட்டை பிடுங்கி, அப்புன்ராஜ் தலையில் பலமாக அடித்துள்ளார். வேலுச்சாமியும் உடன் சேர்ந்து பலமாக தாக்கியுள்ளார். ஏற்கனவே போதையில் இருந்த அப்புன்ராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதை பார்த்து பயந்துபோன இருவரும் எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி உள்ளனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்புன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, வேலுச்சாமி அவரது மகன் ரவீஸ்வரன் ஆகியோரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: