வேடசந்தூர்: அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது குறை கூறினால் தண்ணீர் குடங்களால் முகத்தில் குத்து விடுங்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியில் நேற்று கூட்டுறவுத்துறை சார்பில் பெட்ரோல் பங்க் திறப்பு விழா, சுயஉதவி குழுக்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘அதிமுக ஆட்சி உண்மையாகவே நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை பற்றியோ அல்லது முதல்வரை பற்றி யாரேனும் தவறாக பேசினால் தண்ணீர் பிடிக்கும் குடங்களை கொண்டு முகத்தில் குத்து விடுங்கள். பொதுமக்கள் பஸ்கள் விட வேண்டும் என்று கேட்டனர். மதுப்பிரியர்கள் 12 மணிக்கு முன்பு கடையை திறக்க வேண்டும் என்று கேட்டனர். இரண்டுமே அவர்கள் விருப்பப்படி செயல்பட்டு வருகிறது’’ என்றார். அமைச்சரின் பேச்சை கேட்டு அங்கிருந்த அதிகாரிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.