டெல்லி: ஊரடங்கு காலத்தில் விமான பயணசீட்டு முன்பதிவு செய்திருந்த அனைவருக்கும் பணம் திரும்ப தரப்படும் என உச்சநீதிமன்றத்தில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதையடுத்து கடந்த மே 25ம் தேதி உள்நாட்டு விமான சேவைகள் துவங்கப்பட்டன. ஊரடங்கு குறித்து அறியாததால் விமான டிக்கெட்களை பலரும் முன்பதிவு செய்து வாங்கி இருந்தனர். அந்த டிக்கெட்டுகளுக்கு பலனில்லாமல் போனது. டிக்கெட் பணத்தை விமான நிறுவனங்கள் இதுவரை திரும்ப வழங்காமல் உள்ளன. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பயணசீட்டுத்தொகையை முழுமையாக திருப்பி அனுப்பக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.